எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

தமிழ் (08) கரந்தை வேங்கடாசலம் பிள்ளை இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்து!


தஞ்சை நகரின் ஒரு பகுதியாக உள்ள கருந்திட்டைக்குடி எனப்படும் கரந்தை நகரில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பெரியார் திரு.வேங்கடாசலம் பிள்ளை.  பல பாடல்களைப் படைத்துள்ள  இவர், இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்து உங்கள் பார்வைக்கு :-

------------------------------------------------------------------------------

                                                 பாடல்

------------------------------------------------------------------------------

 

வானார்ந்த  பொதியின்மிசை  வளர்கின்ற  மதியே !

.......மன்னியமூ வேந்தர்கடம்  மடிவளர்ந்த  மகளே !

தேனார்ந்த  தீஞ்சுனைசால்  திருமாலின்  குன்றம்,

.......தென்குமரி  ஆயிடைநற்  செங்கோல்கொள்  செல்வி !

 

கானார்ந்த  தேனே!கற்  கண்டே!நற்   கனியே !

.......கண்ணே!கண்  மணியே!அக்  கட்புலஞ்சேர்  தேவி !

ஆனாத  நூற்கடலை  அளித்தருளும்  அமிழ்தே !

.......அம்மே!நின்  சீர்முழுதும்  அறைதலியார்க்  கெளிதே !

 

-------------------------------------------------------------------------------

                        சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------

 

வான் ஆர்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே !

.......மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே !

தேன் ஆர்ந்த தீஞ் சுனை சால் திருமாலின் குன்றம்

.......தென் குமரி ஆ இடை நற் செங்கோல் கொள் தேவி !

கான் ஆர்ந்த தேனே ! கற்கண்டே ! நற்கனியே !

.......கண்ணே ! கண்மணியே ! அக் கட்புலம் சேர் தேவி !

ஆனாத நூற் கடலை அளித்து அருளும் அமிழ்தே !

.......அம்மே ! நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கு எளிதே !

 

-------------------------------------------------------------------------------

 அருஞ்சொற் பொருள்:

-------------------------------------

 

வானார்ந்த பொதி = வானுயர்ந்த பொதிய மலை ; மன்னிய = பெருமை மிக்க  ; தேனார்ந்த தீஞ்சுனை சால் = தேன் போல இனிக்கும் நீர்ச் சுனைகள் நிறைந்த ; திருமாலின் குன்றம் = வேங்கட மலை ; ஆயிடை = அவ்விடம் (இடைப்பட்ட பகுதியில்)  ; செங்கோல் கொள் = ஆட்சிபுரிகின்ற ; கானார்ந்த  தேனே = காடுகளில் தேனடையிலிருந்து வடியும் தேன் போன்ற தமிழே ! கட்புலம் = பார்வை ; ஆனாத = குறையாத ; சீர் = பெருமை ; அறைதல் = சொல்லுதல் ; யார்க்கு எளிதே = யாருக்கு எளிய செயலாகும்.

 

-------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 20533, மீனம் (பங்குனி) 29]

{12-04-2022}

------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக