ஓரெழுத்து ஒருமொழி; தமிழில் அறுபதுக்கும் மேல் உள !
ஒற்றை எழுத்தே ஒரு சொல்லாக நின்று , அதற்கு ஒன்றோ பலவோ
பொருளாக அமைவது ஓரெழுத்து ஒருமொழி
ஆகும்.உலக மொழிகளில் தமிழில் மட்டுமே
ஓரெழுத்துச் சொற்கள் நிரம்பவும் உள்ளன, என்பது நம்
மொழியின் சிறப்பு !
**********************************************************
அ - அழகு, சிவன், திருமால், திப்பிலி
ஆ - மாடு, அற்பம், மறுப்பு, துன்பம்
இ – அண்மைச் சுட்டு
ஈ - அம்பு, அழிவு, ஒரு சிற்றுயிர், கொடு
உ – சுட்டெழுத்து, சிவன், உமை, நான்முகன்
ஊ - ஊன், இறைச்சி, உணவு, திங்கள், தசை
எ – வினாவெழுத்து, 7 என்பதன் குறி
ஏ - ஏவுதல், அம்பு, இறுமாப்பு, மேல் நோக்கல்
ஐ – நுண்மை, அழகு, அரசன், இருமல், குரு, கோழை
ஓ – ஒழிவு, மதகுப் பலகை, கொன்றை, உயர்வு, நினைவு
ஔ – நிலம், விளிப்பு, கடிதல்,
க - நெருப்பு ,அரசன், நான்முகன், காற்று, காமன், மனம்
கா - சோலை, காத்தல், காவடி, வருத்தம், வலி, துலை
கு - பூமி, குற்றம், சிறுமை, தடை, நிறம், நீக்கம்
கூ – கூவு, நிலம், பூமி
கை - கரம், இடம், உடனே, ஒழுக்கம், சேனை, ஆள், ஆற்றல்
கோ - அரசன், அம்பு, ஆண்மகன், கண், எருது, பசு, பூமி, கோத்தல்
கௌ - 'கௌவு' என்று ஏவுதல், கொள்ளு, தீங்கு
சா - இறத்தல், 'சாவு' என்று ஏவுதல், பேய், சோர்தல்
சீ – அடக்கம், அலட்சியம், ஒளி, கலைமகள், பெண், விந்து, துயில்
சூ – சுளுந்து, வாண வகை, விரட்டும் ஒலிக்குறிப்பு, நாயை ஏவுதல்
சே - சிவப்பு, இடபராசி, அழிஞ்சில் மரம், எருது, காளை,
சோ - மதில், அரண், உமை, வாணாசுரன் நகர்
ஞா – கட்டு, பொருந்து
த – குபேரன், நான்முகன்
தா – கொடு, அழிவு, குற்றம், கேடு, தாண்டு, பகை, வலி,
தீ - நெருப்பு, அறிவு, இனிமை, கொடுமை, சினம், நஞ்சு
து – எரித்தல், கெடுத்தல், வருத்தல், வளர்தல், ”உண்” என ஏவல்
தூ – தூய்மை, தசை, பகை, பற்றுக்கோடு, வெண்மை, வலிமை
தே – கடவுள், அருள், கொள்ளுகை, நாயகன், தெய்வம்
தை - தைத்தல், தை மாதம், பூச நாள், மகர இராசி, ஒப்பனை
ந – இன்மைப் பொருள், மிகுதிப் பொருள் உணர்த்தும் எழுத்து
நா - நாக்கு, அயல், அயலார், திறப்பு, பொலிவு, சுவாலை
நீ - முன்னிலை ஒருமைப் பெயர்
நு – தோணி, நிந்தை, நேரம், புகழ்
நூ - எள், யானை, அணிகலன், தள்ளு, தூண்டு, அசை,
நே – அன்பு, அருள், நேயம்
நை – நைதல், கெட்டுப்போதல், வருந்துதல், நசுங்குதல், வாடல்
நொ – துன்பம், நோய், வருத்தம், தளர்வு, நொய்ம்மை
நோ – வலி, சிதைவு, துக்கம், துன்பம், நோய், வலுவின்மை
நௌ - மரக்கலம், கப்பல்.
ப – காற்று, பெருங்காற்று, சாபம், 1/20 - என்பதன் குறி
பா - பாடல், அழகு, நிழல், பரப்பு, பரவு, தூய்மை, பாம்பு
பி - அழகு.
பீ – மலம், தொண்டி அச்சம்.
பூ - மலர், அழகு, இடம், இலை, கூர்மை, பூமி, பொலிவு, மென்மை
பே – அச்சம், நுரை, மேகம், இல்லை எனும் பொருள் தரும் சொல்
பை - பசுமை, அழகு, இளமை, நிறம், பாம்பின் படம், பொக்கணம்,
போ - 'செல்' என்று ஏவுதல்.
ம – இயமன், காலம், நிலா, சிவன், நஞ்சு, நேரம்
மா - ஒரு மரம், அழகு, அளவு, அறிவு, ஆணி, மாவு, மிகுதி, வயல்
மீ - ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம்
மூ – மூன்று, மூப்பு,
மே - மேன்மை, மேம்பாடு, அன்பு
மை - இருள், எழுது மை, கறுப்பு, குற்றம், நீர், மலடி, மேகம்
மோ – மூக்கினால் மோந்து பார்த்தல்
யா - 'யாவை' , ஐயம், அகலம், கட்டுதல், பாடல் யாத்தல்
வா - 'வா' என்று அழைத்தல்.
வி - விசை, அதிகம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவை, அழகு
வீ - பறவை, நீக்கு, கொல், பூ, விரும்பு, போதல், பூந்தாது
வே – (கூரை) வேய்தல், வேவு பார்த்தல்
வை - 'வை' என்று ஏவுதல், வைக்கோல், கூர்மை, வையகம்
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் ! தமிழ்
! தமிழ் !” வலைப்பூ,
(திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)
17]
{30-04-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக