ஜ, ஷ, ஸ, க்ஷ, ஹ, ஆகிய கிரந்த
எழுத்துகளை விலக்குவோம் !
தமிழில் உள்ள எழுத்துகள் மூன்றாக வகைப்
படுத்தப்பட்டுள்ளன. அவை உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து ஆகியவை !
“அ”, முதல் ”ஔ” வரையிலான 12 எழுத்துகளும்
உயிரெழுத்துகள் எனப்படும். “க், ங், ச், ஞ், ட், எனத் தொடங்கி, ”ன்“ –ல் முடியும் 18 எழுத்துகளும்
மெய்யெழுத்துகள் !
“க, கா,.......கௌ” எனத் தொடங்கி
.”ன,னா......னௌ” என முடியும் 12 X 18 = 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்!
“ஃ” என்பது ஆய்த
எழுத்து; (ஆயுதம் அன்று ! ஆய்தம் என்பதே சரி !)
சரி ! தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்துணை ? 12 + 18 + 216 + 1 = 247. தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 என்பதில் உங்களுக்கு ஏதேனும் ஐயமுண்டா ? இல்லை அல்லவா ?
இப்பொழுது NATARAJAN என்பதைத் தமிழில் எழுதுங்கள் !
எழுதிவிட்டீர்களா ? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் !
என்ன இது ? ”நடராஜன்” என்று எழுதி இருக்கிறீர்கள் ? நீங்கள்தானே ஒப்புக் கொண்டீர்கள், தமிழ் எழுத்துகள் 247 என்று ? இந்த 247 –ல் “ஜ” என்னும்
எழுத்து இருக்கிறதா ? இல்லை அல்லவா ? அப்புறம்
எங்கிருந்து இந்த “ஜ” வந்தது ?
தமிழில் சில ஒலிகளுக்கு எழுத்துகள் இல்லை என்று சொல்லி, சில தமிழ்ப் பகைவர்கள் “ஜ”, ”ஷ”, “ஸ”, ”க்ஷ”, ”ஹ” ஆகிய ஐந்து கிரந்த எழுத்துகளைத் தமிழ் நாட்டில் புகுத்தி விட்டனர். “மஞ்சள்” என்று உரக்கச் சொல்லுங்கள் !
இதில் வரும் “ச” என்னும் எழுத்து “ஜ” என்றுதானே ஒலிக்கிறது ? அப்புறம் எதற்குத் தனியாக ஒரு “ஜ”. “மகம்” என்று உரக்கச் சொல்லிப் பாருங்கள் ! இதில்
வரும் “க” என்பது ”ஹ” என்று தானே
ஒலிக்கிறது ! அப்புறம் எதற்கு இந்த “ஹ” ?
சமற்கிருதம், இந்தி
ஆகியவற்றில் “எ”, “ஒ” ஆகிய இரண்டு ஒலிகளுக்கும் எழுத்துகள் இல்லை.
”எறும்பு” என்று
வடமொழியில் எழுத முடியாது.”
“ஏறும்பு” என்று தான் எழுத முடியும். “தொல்காப்பியம்” என்று
இந்தியில் எழுத முடியாது;
“தோல்காப்பியம்” என்று தான் எழுத முடியும் !
வங்காள மொழியில் “வ” என்னும் ஒலிக்கு எழுத்து இல்லை. “வைத்தியநாதன்” என்று வங்காள
மொழியில் எழுத முடியாது. “பைத்தியநாதன்” என்றுதான்
எழுத முடியும். அங்கு “வ” என்னும் ஒலி
இல்லாமையை “ப” என்னும் ஒலி
தான் இட்டு நிரப்புகிறது !
ஆங்கிலத்தில் “அன்பழகன்” என்று எழுத முடியாது. ANBAZHAGAN என்று எழுதுகிறோம். “ZHA" மூன்று எழுத்துகளும் “ழ” என்னும்
ஒலியைக் கொண்டுவர முடியாது. ZINC, ZEBRA, ZONE, ZOO ஆகிய எந்த
ஆங்கிலச் சொல்லிலும் “ழ” எழுத்தின் ஒலி
வருகிறதா ? இல்லையே ! ஆங்கிலத்தில் “ழ” ஒலி இல்லை
என்பது உண்மை அன்றோ !
உலகத்தில் எந்த மொழியை எழுத்துக் கொண்டாலும், அந்த மொழிகளில் அனைத்து ஒலிகளையும்
ஒலிப்பதற்கான எழுத்துகள் இருக்கின்றன என்று யாராலும் கூற முடியாது. குறிப்பிட்ட
ஒலியைப் பலுக்குவதற்கு (உச்சரிப்பதற்கு) ஏதாவதொரு எழுத்து இடத்திற்குத் தக்கவாறு
அங்கு அமைகிறது !
இந்த உண்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல், தமிழில் கிரந்த எழுத்துகளான “ஜ”, “ஷ”, “ஸ”, “க்ஷ”, “ஹ” ஆகியவற்றைப்
புகுத்தியவர்களின் தமிழ்ப் பற்றை என்னவென்பது ? அவற்றை விடாமல் பற்றிக் கொண்டிருக்கும்
நாமும் “தமிழ்ப் பகைவர்” என்னும்
பழிக்கல்லவா ஆளாகிறோம் !.
இனிமேல், நாம் “நடராசன்”, என்றே எழுதுவோம் ! “நடராஜன்” வேண்டாம். “சுரேச்குமார்” என்று
எழுதுவோம்; “சுரேஷ்குமார்” வேண்டாம். “”இராமதாசு” என்று
எழுதுவோம்; “இராமதாஸ்” வேண்டாம் !
என்ன நண்பர்களே ! கிரந்த எழுத்துகளை
விலக்கிவிட்டுத் தமிழ் எழுத்துகளையே இனிப்
பயன்படுத்தலாமா ? நீங்கள்
அணியம் (READY) என்றால் நானும் அணியமே ! “அணியம்” என்று
பின்னீடு செய்து நமது தமிழ்ப் பற்றை உலகறியச் செய்வோமே ! இதற்கும் ஒரு ”விழைவு” (LIKE) தராமல் “அணியம்” என்று
கருத்துரை (COMMENT) எழுதுங்கள் பார்க்கலாம் !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 11]
{25-05-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக