பொருள் புரியாச் சொற்கள் ! புழக்கத்தில்
இருப்பது ஏன் ?
[தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி கம்பர்
தெருவில் ஒருவீடு]
----------------------------------------------------------------------------------
மணி : வாருங்கள் அத்திம்பேர் ! அம்மாஞ்சி
நீயும் வாடா !
அத்திம்பேர் : ஏனடா மணி ! நீ என்ன செய்து
கொண்டிருக்கிறாய் ? படிப்பெல்லாம் முடிந்து விட்டதா ?
மணி : ஆமாம் அத்திம்பேர் ! மின்னியல், மின்மவியலில் பொறியியல் பட்டப் படிப்பு !
சென்ற மாதம்தான் முடிவடைந்தது ! இனி வேலை தேடும் படலம்தான் !
அத்திம்பேர் : அதற்கென்ன ? ஏதாவது ஏற்பாடு செய்வோம் ! ஆமாம் அம்மா
எங்கே ?
மணி : அம்மா ! அத்திம் பேர்
வந்திருக்கிறார். கூடவே அம்மாஞ்சியும் வந்திருக்கிறான். வந்து பாருங்கள் !
அம்மா : வாருங்கள் அண்ணா ! வாடா அம்பி
! வீட்டில் மன்னியும் குழந்தைகளும் நலமா ?
அத்திம்பேர் : எல்லோரும் நலம்தான் தாமரை !
ஆமாம், நீயும் அகத்துக்காரரும் எப்படி
இருக்கிறீர்கள் ?
அம்மா : நாங்கள் நலந்தான் அண்ணா ! மணி
பொறியியல் பட்டப்படிப்பு முடித்து விட்டான் ! அவனுக்குத் தான் ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் !
அத்திம்பேர் : நான் தான் தமிழ் படித்து
விட்டு ஆசிரியராக அல்லாடுகிறேன் ! மணியாவது பொறியியல் பட்டப்படிப்பு
படித்திதிருக்கிறானே ! அதுவரை மகிழ்ச்சி தான் !
மணி : சரி அத்திம்பேர் ! உங்கள் ஊர்க்காரர்
ஓசூரில் ஒரு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறாரே ! அவர் மூலம் எனக்கு உதவி
செய்யக் கூடாதா ?
அத்திம்பேர் : சரி மணி ! அடுத்த மாதம்
எங்கள் ஊருக்கு வா ! அவரைப் போய்ப் பார்ப்போம் !
மணி : சரி அத்திம்பேர் ! வருகிறேன் !
அத்திம்பேர் : ஆமாம் மணி ! சொல்லுக்குச்
சொல் அத்திம்பேர் அத்திம்பேர் என்கிறாயே ? அத்திம்பேர்
என்பதற்கு என்ன பொருள் சொல் பார்ப்போம் !
கூடவே அம்மாஞ்சி, மன்னி என்பதற்கும் பொருள் சொல்ல முடியுமா ?
மணி : அத்திம்பேர் என்றால் அத்தை
வீட்டுக்காரர் ! அம்மாஞ்சி என்றால் அத்திம்பேரின் மகன் ! அண்ணன் மனைவி மன்னி !
என்ன சரிதானா அத்திம்பேர் ?
அத்திம்பேர் : சரி மணி ! அத்திம்பேர், அம்மாஞ்சி, மன்னி
என்றால் யார் என்று சொன்னாயே தவிர, அந்தச்
சொற்களின் பொருள் அல்லது திருந்திய வடிவம்
என்னவென்று சொல்லவில்லையே ?
மணி : எல்லோரும் வழக்கமாகச் சொல்வதைத் தான்
நானும் சொன்னேன் ! அந்தச் சொற்களுக்குப் பொருள் தெரியாதே அத்திம்பேர் !
அத்திம்பேர் : சரி நானே சொல்கிறேன் ! அத்தை
+ அன்பர் = அத்திம்பேர் ! அத்தையின் அன்பர், அதாவது
அத்தையின் கணவர் என்று பொருள் !
மணி : அப்படியா ? சரி !
அம்மாஞ்சி ?
அத்திம்பேர் : அம்மான் என்றால் மாமன் என்று
பொருள். அம்மானின் சேய்,
அதாவது அம்மானின் மகன்
அம்மாஞ்சி ! இப்பொழுது புரிகிறதா ?
மணி : புரிகிறது அத்தையன்பர் அவர்களே !
மன்னி என்பதற்கும் அப்படியே பொருள் சொல்லிவிடுங்கள் !
அத்திம்பேர் : அண்ணல் என்றால் பிற
பொருள்களுடன் தமையன் என்றும் ஒரு பொருள் . அண்ணல் என்ற சொல் மருவி அண்ணன்
ஆகிவிட்டது. அண்ணன் மனைவி அண்ணி. இந்த அண்ணன் என்பவர் ஒரு வீட்டின் தலைவர். அதாவது
மன்னன் ! மன்னனின் மனைவி மன்னி ! அண்ணன் மனைவி அண்ணி; மன்னன் மனைவி
மன்னி ! அவ்வளவுதான் !
மணி : தமிழ் நாட்டில் இருக்கிறோம்; அன்றாடம்
தமிழில் பேசுகிறோம்;
ஆனால் சில
சொற்களுக்குப் பொருள் புரியாமலேயே வாழ்கிறோம் ! இது தவறன்றோ ?
அத்திம்பேர் : தவறு தான் ! அதற்காக
நிரம்பவும் வருந்தாதே ! இனி சரியாக எழுதவும் பேசவும் முயற்சி செய் ! அது போதும் !
மணி : அத்தையன்பரே ! உங்களுக்கு ஒன்று
தெரியுமா ? நான் ”பேடுருளி” ஒன்று வாங்கி இருக்கிறேன் !
அம்மான் சேய் : (இடையில் குறுக்கிட்டு) “பேடுருளியா” ? அப்படியென்றால் என்ன ?
அத்தையன்பர் : குமரன் ! ”பேடுருளி” என்றால் MOPED ! முகநூற்
குழுவான தமிழ்ப் பணி மன்றத்தில் இதைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை வந்தது !
பார்த்தேன்! உணவு அருந்தியபின் உனக்கு இது பற்றி விளக்கமாகச் சொல்கிறேன் !
அம்மா : சரி ! எல்லோரும் வாருங்கள் !
உணவருந்தலாம் !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 13]
{27-05-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக