அன்னைத்
தமிழிருக்க அயல்மொழி நமக்கெதற்கு ?
எழிலரசி: மலர் !
வா ! வா ! நலமாக இருக்கிறாயா ? கடைத் தெருவுக்குப் புறப்பட்டுக்
கொண்டிருக்கிறேன் .என்னுடன் வருகிறாயா ? ஒரு “துயிலி” (NIGHTY) வாங்கி வர வேண்டும் ! எனது “பேடுருளி”யிலேயே (MPOED) சென்று வரலாம் !
மலர்மதி: சரி
எழிலரசி ! வருகிறேன் ! ”பேடுருளி” எதற்கு? எனது பாவையூர்தியில் (SCOOTY) சென்று வரலாமே ?
எழிலரசி: சரி !
அப்படியே செய்வோம் ! வண்டிக்குக் காப்புறுதிச் சான்று (INSURANCE
CERTIFICATE) கைவயம் வைத்திருக்கிறாயா ? நீ உகையுரிமம் (DRIVING LICENCE) வைத்திருக்கிறாயா ?
மலர்மதி:
இரண்டுமே இருக்கின்றன ! கவலைப் படாதே ! தலைச் சீரா (HELMET) மட்டும் உங்கள் வீட்டிலிருந்து இரண்டு எடுத்துக் கொள் !
எழிலரசியின்
அப்பா: எழில் ! திரும்பி வரும்போது கபிலர் தெருவுக்குச் சென்று தாங்குதளம்
கட்டுநரைப் (CENTERING FITTER) பார்த்து, நாளை வந்து என்னைப் பார்க்கச் சொல் !
எழிலரசி: சரி
அப்பா ! நாங்கள் சென்று வருகிறோம் !
மலர்மதி: எழில்
! உன் தந்தை தாங்கு தளம் கட்டுநர் என்றாரே
! அப்படியென்றால் யார் அவர் ?
எழிலரசி: மலர் !
புதிதாக வீடு கட்டும் போது, கற்காரைக் கலவையைக் கொட்டிக் கூரை அமைப்பதற்கு வாய்ப்பாகப்
பலகைகளையும், முட்டுக் கம்புகளையும் கொண்டு
கிடைமட்டத் தளம் அமைக்கிறாரே அவர் தான் தாங்குதளக் கட்டுநர் (CENTERING
FITTER). ஆங்கிலத்தில் CENTERING என்றால் தமிழில் தாங்குதளம் என்று பொருள் !
மலர்மதி: நல்ல
தமிழ்ச் சொல்லாக இருக்கிறதே ! உங்கள் வீட்டில் தமிழ்ச் சொற்கள் நிரம்பவும்
புழங்குமோ ?
எழிலரசி: ஆமாம்
! என் பெயர் உனக்குத் தெரியும் ! தந்தையின் பெயர் அருள்நம்பி ! தாயார் இளம்பிறை !
தம்பி இளமுருகு ! எங்கள் வீட்டில் ஆங்கிலச் சொல் ஒன்று கூடப் புழங்கக் கூடாது
என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளோம் !
மலர்மதி: நல்ல
முடிவு ! இங்கிலாந்து மக்களோ, அமெரிக்க மக்களோ தமிழில் பேசுவதில்லை ?
தமிழக மக்கள் தான் சுரணை கெட்டுப் போய்,
ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் ! தெரிந்த
தமிழ்ச் சொற்களைக் கூடத் தவிர்த்துவிட்டு ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்
!
எழிலரசி: ஆமாம்
மலர் ! “இன்று மாலை வருகிறேன் என்பதை விடுத்து
இன்னிக்கு ஈவ்னிங் வர்ரேன்” என்பது என்ன ஞாயம் ? இந்த அழகில் ”தமிழ் தான் எனக்கு மதர் டங்“ என்று பீற்றல் வேறு !
மலர்மதி: சரி
விடு எழில் ! உங்கள் வீட்டுக் ”குளிர்ப்பேழையில் (REFRIGERATOR)
பனிக்கட்டி நீக்கமைப்பு (DEFROST
CONTROL) இருக்கிறதா ? எங்கள் பேழையில் அஃது இல்லை !
எழிலரசி:
அப்படியா ! வேறு பேழை வாங்குவது தானே !
மலர்மதி: வாங்க
வேண்டும் ! எந்த நிறுவனத்தின் வனைவை (MAKE)
வாங்கலாம் ?
எழிலரசி:
குறிஞ்சி நிறுவன வனைவை (MAKE) வாங்குங்கள் ! நன்றாக இருக்கும் !
மலர்மதி: சரி
எழில் ! பேசிக்கொண்டே கடைத் தெருவுக்கு வந்துவிட்டோம் ! எந்தத் துணிக் கடைக்குச்
செல்லலாம் ?
எழிலரசி:
அழகேசன் அணிய ஆடையகத்திற்குச் (READY
MADE STORE) செல்வோம் ! அங்கு “துயிலி” மட்டுமே விற்கப்படுகிறது ! ஞாயமான
விலையில் தரமான ”துயிலி”கள் கிடைக்கின்றன !
[இருவரும்
கடைக்குள் செல்கின்றனர்]
மலர்மதி: ஐயா !
எனக்குத் துயிலி (NIGHTY) ஒன்று வேண்டும் ! நான்கைந்து துயிலிகளை
எடுத்துப் போடுங்கள்!
அழகேசன்:
தருகிறேன் அம்மணி ! தம்பி ! ஆதவனிடம் சென்று இரண்டு செவ்விளநீர் சீவி விரைவாக
வாங்கி வா !
எழிலரசி: நான்
தான் துயிலி வாங்க வந்தேன் ! நீயும் வாங்கப் போகிறாயா ?
மலர்மதி: ஆமாம்
எழில் ! ”துயிலி” என்ற பெயரைக் கேட்டவுடனேயே, ஏதோவொரு
இனம்புரியாத உந்துதல் என்னுள் எழுந்து விட்டது ! அழகிய தமிழ்ச் சொல் துயிலி!
[”துயிலி”களைப் பார்வையிட்டு எதைத் தேர்வு செய்யலாம் என்று சில நிமிடங்கள்
குழம்பி நிற்கின்றனர்]
அழகேசன்: தம்பி
! இளநீர் வாங்கி வந்து விட்டாயா ? உறிஞ்சு குழலைப் (STRAW) போட்டு அம்மணிகளிடம் கொடு !
மலர்மதி: ஐயா !
அணிய ஆடையகத்தில் பல்லவி (PRESSURE COOKER), வறுகலன் (FRYING PAN), உண்கலம் (MEALS
PLATE), நீர்க்குவளை (TUMBLER), சேமச் செப்பு (THERMOS FLASK), எல்லாம் வைத்திருக்கிறீர்களே ? அவை எதற்கு ?
அழகேசன்: அம்மணி
! ஒளியுருக்கில் (STAINLESS STEEL) செய்த இன்னும் பல அடுகலன்களும் (UTENSILS)
உள்ளே இருக்கின்றன ! எங்களிடம் “துயிலி” வாங்கும் ஒவ்வொருவருடைய பெயரையும்
பதிவு செய்து கொள்வோம். மாத இறுதியில் குலுக்கல் முறையில் 10 பேரைத் தேர்வு செய்து இந்தப் பொருள்களைப் பரிசாக வழங்குவோம் !
எழிலரசி: ஐயா !
இப்படிப் பரிசு தருவதற்கு உங்களுக்குக் கட்டுப்படி ஆகிறதா ?
அழகேசன்: அம்மணி
! அழகிய தமிழில் “துயிலி” என்று கேட்டு வாங்குவோருக்கு அளிக்கும் இந்தப் பரிசு, அவர்களுக்கு அளிக்கும் பரிசு அன்று ! தமிழுக்கு அளிக்கும் பரிசு ! தமிழனாகப் பிறந்து, தமிழையே பேசி, வாழ்ந்து வரும் நான் என் அன்னைத்
தமிழுக்கு இதைக் கூடச் செய்யவில்லை எனில், நான் தமிழன்
என்று சொல்லிக் கொள்ளத் தகுதி இல்லாதவன் !
[எழிலரசி,
மலர்மதி இருவரும் திகைத்து நிற்கின்றனர்.
சுரணையுள்ள தமிழர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர்]
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 16]
{30-05-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக