தமிழர்களில் ஒரு
பகுதியினர் மட்டும் இந்த “ஷ” கரத்திற்கு அடிமையாகிப் போனது ஏன் ?
தமிழ்
நெடுங்கணக்கில் உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, உயிர்மெய்யெழுத்து 216, ஆய்த எழுத்து 1,
ஆக மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன என்பது தமிழ் படித்த அத்துணைப் பேருக்கும்
தெரியும். படித்து முடித்தாகிவிட்டது; ஏதோவொரு
பணியையும் தேடிக் கொண்டாகிவிட்டது. சிலருக்குத் திருமணமும் ஆகிவிட்டது !
இத்துணைக்
காலத்திற்குப் பிறகு, ஒரு சிலருக்கு, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள “ச”கர வரிசை எழுத்துகள் மட்டும் பகையாகிப் போய்விட்டன. எப்படி என்று
கேட்கிறீர்களா? சில நண்பர்களை அழைத்து ஆய்வு செய்வோமே
! முதலில் சண்முகம் என்பவரை அழைத்து உங்கள் பெயரை தமிழிலும் ஆங்கிலத்திலும்
எழுதுங்கள் என்று சொல்லுங்கள். அவர் தமிழில் “ஷண்முகம்” என்றும் ஆங்கிலத்தில் SHANMUGAM
என்றும் எழுதி இருப்பார். அவருக்கு “ச” எழுத்து மறந்து போய்விட்டதா அல்லது
அதன் மீது ஏதாவது வெறுப்பா ?
இன்னொருவரை –
குறிப்பாகச் சரவணன் என்பவரை - அழைத்து அவர்
பெயரை இரு மொழிகளிலும் எழுதச் சொல்லுங்கள். “SHARAVAVAN” என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார். அன்பரே, தமிழிலும் எழுதுங்கள் என்று
சொன்னால், I AM SORRY என்று சொல்லிவிட்டு “ஷரவணன்” என்று எழுதுகிறார். என்ன நண்பரே ! “சரவணன்” என்று தானே எல்லோரும் பெயர் வைத்துக்
கொள்கிறார்கள், நீங்கள் மட்டும் “ஷரவணன்” என்று பெயர் வைத்துக் கொண்டீர்களா ?
என்று வினவினால், பெயரியல் கலையின்படி (NAMALOGY) “ச” எழுத்துக்குப் பதில் “ஷ” எழுத்துப் பயன்படுத்தினால் நான் பெரிய ஆளாக வருவேன் என்று பெயரியல் கலைஞர் (NAMALOGIST) ஒருவர் சொன்னார். என்கிறார் !
தாய்க்
குலத்திலிருந்து ஒருவரை அழைத்து “சாந்தி” என்று எழுதச் சொல்லுங்கள். அவர் உங்களை ஒரு மாதிரியாகப்
பார்த்துவிட்டு “SHANTHI” என்று எழுதுகிறார். தமிழில் எழுதச்
சொன்னால் “ஷாந்தி” என்று வரைகிறார். என்ன ஆயிற்று இந்த தமிழ்க் குலத்திற்கு ? நாம் வாழ்வது தமிழகம் தானா ? தமிழகத்தில்
இன்று தாராளமாகப் புழங்கும் ”ஷ”கரப் பெயர்களைப் பாருங்களேன் !
(01) ஷங்கர் (02) ஷிவா (03) ஷிவகுமார் (04) ஷேகர் (05) ஷெல்வகுமார். (06) ஷரவணன் (07) ஷாந்தி (08) ஷண்முகம் (09) ஷம்பத் குமார் (10) ஷெல்வா (11) ஷெல்வி
தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டும் இந்த “ஷ”கரத்திற்கு அடிமையாகிப் போனது ஏன் ? இவர்கள் எல்லாம் தம் சொந்த அறிவை இழந்து வாழும் ”சிந்தனைச் சிற்பிகள்” ஆகிவிட்டார்களோ ? பித்தலாட்டக் காரர்களின் பேச்சைக் கேட்டுத் தன் பெயரைச் சிதைத்துக் கொண்ட “பேரறிவாளர்கள்” ஆகப் பிறப்பெடுத்து விட்டார்களோ ?
பெயரியல் கலைஞன்
(NAMALOGIST) என்று சொல்லிக் கொண்டு தொலைக்
காட்சிகளில் கரும்பலகையும் சுண்ணக் காம்புக் (CHALK PIECE) கையுமாக காட்சிகள் நடத்தும் பித்தலாட்டக் காரர்களின் பின்னால்
அணிவகுத்துச் செல்ல இவர்கள் எப்படித் துணிந்தார்கள் ? எதையும் பகுத்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டிய இந்த பளிங்குச்
சிலைகள் சாக்கடைக்குள் சரிந்து கிடப்பது ஞாயந்தானா ?
உறவியல் கலைஞர்
(FAMILIOLOGIST) என்று சொல்லிக் கொண்டு நாளை இன்னொரு
ஏமாற்றுக்காரன் வந்து உன் தந்தையை மாற்றிவிட்டு இன்னொரு ஆளைத் தந்தையாக ஏற்றுக் கொண்டால், ஒளிமயமான எதிர்காலம் உனக்கு உண்டு என்று சொன்னால், இந்த பேதைகள் பெற்ற தந்தையையே மாற்றி விடுவார்களா ?
கோடி கோடிச்
செல்வர்களாக இந்தியாவில் உலா வந்து கொண்டிருக்கும் “டாட்டா”, பிர்லா, அம்பானி, அதானி, அகர்வால் எல்லோரும் பெயரியல் கலைஞர்களின் பேச்சைக் கேட்டுப் பெயரை
மாற்றிக் கொண்டு வாழ்வில் உயர்வடைந்தவர்கள் தானா ?
பெயரியல்
கலைக்கு ஒரு மனிதனின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஆற்றல் உண்டு என்பது உண்மையானால், நாட்டில் நடமாடும் அத்துணைப் பெயரியல் கலைஞர்களும், தங்கள் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டு “டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி அகர்வால்” ஆகிவிட வேண்டியது தானே ? எதற்காகத்
தொலைக் காட்சிகளில் தோன்றி ஏமாறுபவர்கள் இருக்கிறார்களா என்று தூண்டில் போட்டுக்
கேவலமான பிழைப்பை நடத்த வேண்டும் ?
ஷரவணன், ஷண்முகம், ஷாந்தி, ஷிவா, ஷேகர் எல்லோரும் சிந்தியுங்கள் !
ஏமாற்றுக்காரர்களின் தூண்டிலுக்கு நீங்கள்
இரையானது போதும். சிதைந்து போன உங்கள் பெயர்களை மீட்டெடுத்து, முன்பு போல் “சரவணன், சண்முகம், சாந்தி, சிவா, சேகர்’ என்று மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது அழகிய தமிழில் குறிஞ்சி வேந்தன்
(சரவணன்), சிலம்புச் செல்வன் (சண்முகம்), பண்பழகி (சாந்தி), சுடர்வண்ணன் (சிவா), முடியரசன்( சேகர்) என்று மாற்றி அமைத்து “நான் தமிழன்” என்று பறை சாற்றித் தலை நிமிர்ந்து
வாழுங்கள் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ.
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 17]
{31-05-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக